உயர்வானவளே…!

மார்ச் 20, 2008

 

 

 

என் கண்களே
எனக்குப் பிடித்த
ஒளிப்பதிவுக் கருவி

காரணம்
அதற்கு உன்னை
மட்டுமே
பிடிக்கத் தெரியும்

*

 என் பல
முத்தங்களுக்கு
சில முத்தங்களையே
திருப்பித்
தந்திருக்கிறாய் நீ

உன்னை என்னிடம்
இழப்பதற்காகவா
முத்தக் கடனில்
மூழ்கிக் கொண்டிருக்கிறாய்

*

கவிதை என்று
யார் கேட்டாலும்

உன் பெயர்
சொல்வேன்

உன் பெயர்
என்னவென்று
எவர் கேட்டாலும்

நான் எழுதாத
காவியம்
என்பேன்

*

என்னை எழுத
வைத்தவள்
நீ என்றாலும்

நான்
கவிஞனானது
உன்னை அழைத்து
அழைத்துத்தான்

*

உன்னைப் பற்றி
எழுத
நினைத்தபோதெல்லாம்

எழுதிக்
கொண்டேயிருந்தேன்

உன்னை விட
எழுத நினைத்தேன்

எழுதுவதையே
மறந்துவிட்டேன்

 

-யாழ்_அகத்தியன்


அன்னையே தெய்வம்…[02]

மார்ச் 18, 2008

ஆயிரம் கைகள்
சேர்ந்து செய்த
மெத்தையில்
படுத்திருக்கிறேன்

உன் இருகையில்
மட்டும்தான்
தூங்கி இருக்கிறேன்

*

அம்மா உனக்கு
அவ்வளவு பாரமாய்
இருந்தேன் என்றா

பால் கொடுத்து
என்னை வளர்த்தாய்

 நீ
தூக்கவே
முடியாதளவுக்கு

*

வெற்றி பெற்றால்
தேடி வந்து வாழ்த்த
ஆயிரம் உறவுகள்

தோற்றுப்போனால்
தேடி வந்து அணைக்க
உன்னைத் தவிர யார்
எனக்கு

*

ஆயிரம் முறை
தலை சீவிய
சந்தோசம்

 நீ
ஒரே ஒரு தடவை
தலை கோதிவிடும்
போது

*

எல்லாம் சேலைதான்
எனினும்

 நீ
கட்டிய சேலையில்தான்
என் நிம்மதியான தூக்கம்
அவிழ்ந்து கிடக்கிறது

*

என்னை நடக்க வைத்துப்
பார்க்க வேண்டும்
என்ற ஆசையை விட

 நான் விழுந்து விடக்கூடாது
என்ற கவனத்தில்தான் இருந்தது
உன் தாய்ப்பாசம்

-யாழ்_அகத்தியன்


அன்னையே தெய்வம்…!

மார்ச் 17, 2008

தாயே அன்று
உந்தன் மடியில்
மறந்து போன

என் எல்லா சோகமும்
ஒன்று சேர்ந்து
என்னைக்கொல்கிறது

எனைத் தூங்க வைக்க
தூரத்தில் நீ என்பதால்

*
இந்த உலகில் எந்த
மூலையிலும்
கிடைக்கவில்லை

உந்தன் கருவறையில்
கிடைத்த எனக்கான
பாதுகாப்பு

*

என் மேலான உந்தன்
கவனத்துக்காகவே

எத்தனை முறை
வேண்டுமானாலும்

குழந்தையாய்
பிறக்கலாம்
உனக்கு நான்

*

எந்தப் பாசப்படியைக்
கொண்டு நிறுத்தாயோ
தெரியவில்லை

உன் எல்லா
குழந்தைக்கும்

ஒரே அளவிலான
அன்பையே
காட்டுகிறாயே

*

என் தாரத்தின்
மறுபிறவியில்
உணர்ந்து
கொண்டேன்

நான் பிறக்க
நீ தாங்கிய
பிரசவ வலியை

*
உன்னில் தடுக்கி
விழுந்தபோதும்

உன் பக்தனாய்
அம்மா
என உன்னையே
அழைத்தபடி
விழுந்திருக்கிறேன் நான்

*
நான்
பார்த்திருக்கிறேன்

உன் கண்
வலிக்காக அழாமல்

என் மேல்
விழுந்த தூசிக்காய்

நீ கண்ணீர்
சிந்தியதை

*
அன்று
நிலாவைக் காட்டி
நீ சோறு ஊட்டையில்

அருமை அறியாமல்
உன் கையை தட்டி
விட்டிருக்கிறேன்

இன்று
நிலாவும் இருக்கிறது
சோறும் இருக்கிறது

தூரத்தில் உன் கை
அம்மா
ரொம்பப் பசிக்கிது

-யாழ்_அகத்தியன்


இலக்கியமானவளே…!

மார்ச் 13, 2008

 

எந்தக் கவிதையும்
என்னவள்போல்
எழுத வைத்ததில்லை

*

என்னவள்போல் எந்தக்
கவிதையும் என்னைக்
கவிஞனாக்கியதில்லை

*

அவள் தேடிய வாசகன் நான்
என்பதைவிட எனக்கான கவிதை
அவளே என்பதே மிகச் சரியானது

*

என்னால் எழுதவே
முடியாத கவிதை
அவள்

என்றாலும் அவளால்
வாசிக்கப்படும்
கவிஞன் நான்

*

எந்தக் கவிதைக்குமான
சொந்தக்காரன் நானல்ல

எனக்கேயான கவிதையை
சொந்தமாக்கிய கவிஞன் நான்

-யாழ்_அகத்தியன்
 


வரமானவளே…!

மார்ச் 11, 2008

 

என் கனவே நீ என்பதால்தான்
கலைந்துபோகும் உறக்கத்தை
விரும்புவதில்லை நான்

*

உன் விழிகளுக்கு
இமையாக மட்டுமல்ல

உன் உறக்கத்தில்
உன்னைக் காக்கும்
விழியுமாவேன் நான்

*

 நீயே எனக்கான கவிதை
என்பதைக் கண்டறிந்ததில்
கிறுக்கன் நான் கவிஞனானேன்
உனக்காய் உலகுக்கு

*

ஆயிரம்
கவிதை எழுதிக்
 கிறுக்கனானேன்

உன் பெயர் எழுதி
கவிஞனானேன்

*

உனக்கான கவிதை என்று
தெரிந்தும்

எனக்கா என நீ
கேக்கும் அழகுக்காகவே

எத்தனை கவிதையும்
எழுதலாம் நான்

-யாழ்_அகத்தியன்


மனமானவளே..!

மார்ச் 3, 2008

 

உன் கோடி முத்தங்களையும்
தோற்கடித்துக் கொண்டிருக்கும்
பெருமையில் இன்றும் இனிக்கிறது
உன் முதல் முத்தம்

*

உனக்கும் கவிதைக்கும்
அப்படி என்ன கோபம்
சேர்ந்து வராதளவுக்கு

*

காதலைக் கொண்டாட
வருசத்தில் ஒரு நாள்தான்
காதலர்தினம் என்றால்

அந்தத்தினத்தையே
வருசம்பூரா கொண்டாடுவேன்
உன்னோடு நான்

*

என்னை கவிஞனாக்கியதன்
பெருமை உலகுக்குரியது

எனக்கான கவிதை நீ என்பதின்
பெருமை எனக்குரியது
 

*

நான் உறங்கா  நேரத்தில்
என் விழியாய் நீ

நீ கனவு காணும் நேரத்தில்
உன்னைக் காணும் விழியாய் நான்

-யாழ்_அகத்தியன்