அடியே என் கவிதையே!

மார்ச் 16, 2007

அடியே என் கவிதையே..! 

 

அடியே
என் கவிதையே
தோல்வியில் பிறந்தவளே
அடங்கடி கவிதையே!
   

உனைப் பாடையில் போகச் சொன்னால்
எனைக் கூட வரச் சொல்லுறியே!
 

கவி பிறக்கவில்லை என்று
ஏங்குவோர் பலர் இருக்க
ஏன் பிறந்தாய் எனக்கு…?
 

காகம் கரையும் போதும் பிறக்கிறாய்…
குளியலறையிலும் பிறக்கிறாய்…
தூங்கும் போதும் பிறக்கிறாய்…
விழிக்கும் போதும் பிறக்கிறாய்…
விட்டால் மரண மயக்கத்திலும்
பிறப்பாய் போல் இருக்கிறது.

அவள் எனை விட்டுப் பறந்தாள்
அதனால் நீ எனக்குள் பிறந்து
எனை வருத்துகின்றாயே!

என்ன பாவம் செய்தேனடி?
காதலித்தது தப்பா?
அவள் கை விட்டது தப்பா?
அவள் பிரிந்ததால்
நீ பிறந்ததுதான் தப்போ தப்பு

ஏன்டி அடை மழைபோல் அழுகிறாய்?
உன் சோகத்தைத் தெரிவிக்க எதற்கடி
என் பேனாவின் ஆயுளைக் குறைக்கிறாய்?
 
 உனைக் கள்ளிப் பால் கொடுத்து
கொலை செய்ய
லஞ்சம் கொடுத்து
ஆள் தேடுகிறேன்
யாரும் கிடைக்கவில்லை
இதுவரை.
 

என்னடி முறைக்கிறாய்?
பிறக்கும் கவிதைகளை வெறுக்கும்
முதல்வன் நான் என்றா?
 

 

ஆமா…
வெறுக்கும் கடைசியவனும்
நான்தான்

போடி… போ!
அனாதை ஆச்சிரம கரங்கள்
ஆயிரம் போ!

உனைப் படித்து
வடிப்பார்கள் கண்ணீர்
எனைத் தேடி வந்தால்
உனை
எண்ணை ஊற்றி எரித்திடுவேன்.

போம்மா போ!
மறந்தும்
விலை போகாதே
எனைப் பிரிந்தவளிடம்
 

 

அவள் உனை
கசக்கி எறிந்திடுவாள்!

   

-யாழ்_அகத்தியன்

 


Follow

Get every new post delivered to your Inbox.