அன்னையே தெய்வம்…!

மார்ச் 17, 2008
அன்னையே தெய்வம்…!
 

 

 தாயே அன்று
உந்தன் மடியில்
மறந்து போன 
 

என் எல்லா சோகமும்
ஒன்று சேர்ந்து
என்னைக்கொல்கிறது
 

எனைத் தூங்க வைக்க
தூரத்தில் நீ என்பதால்
  

*
 இந்த உலகில் எந்த
மூலையிலும்
கிடைக்கவில்லை 
 

உந்தன் கருவறையில்
கிடைத்த எனக்கான
பாதுகாப்பு
 

*
 

என் மேலான உந்தன்
கவனத்துக்காகவே
 

எத்தனை முறை
வேண்டுமானாலும்
 

குழந்தையாய்
பிறக்கலாம்
உனக்கு நான்
 

*
 

எந்தப் பாசப்படியைக்
கொண்டு நிறுத்தாயோ
தெரியவில்லை
 

உன் எல்லா
குழந்தைக்கும்
 

ஒரே அளவிலான
அன்பையே
காட்டுகிறாயே
 

*

 

   

 என் தாரத்தின்
மறுபிறவியில்
உணர்ந்து
கொண்டேன்  

நான் பிறக்க
நீ தாங்கிய
பிரசவ வலியை
 

*
 உன்னில் தடுக்கி
விழுந்தபோதும் 
 

உன் பக்தனாய்
அம்மா
என உன்னையே
அழைத்தபடி
விழுந்திருக்கிறேன் நான்
 

*

 

 
நான்
பார்த்திருக்கிறேன் 

உன் கண்
வலிக்காக அழாமல்
 

என் மேல்
விழுந்த தூசிக்காய்
 

நீ கண்ணீர்
சிந்தியதை
 

*
  

அன்று
நிலாவைக் காட்டி
நீ சோறு ஊட்டையில் 

அருமை அறியாமல்
உன் கையை தட்டி
விட்டிருக்கிறேன்
 

இன்று
நிலாவும் இருக்கிறது
சோறும் இருக்கிறது
 

தூரத்தில் உன் கை
அம்மா
ரொம்பப் பசிக்கிது..
   

    

-யாழ்_அகத்தியன்  

    


Follow

Get every new post delivered to your Inbox.