எழுத மறந்த கவிதைகள்

மே 17, 2007

காதலில் வென்ற என் அப்பாவின்
எதிர்ப்பை மீறி சேர்த்து வைத்தார்
காதலில் தோற்றுப் போன
என் சித்தப்பா என்னையும்
அவளையும்

*

என் அன்னையை வயோதிபர் இல்லத்துக்கு
அனுப்பி வைத்த என் மனைவி மறந்து விட்டாள்
தன் பிள்ளைக்கு வயோதிபர் இல்ல முகவரியை
காட்டிக் கொடுத்ததை

*

நீங்கள் அழுத்திய இலக்கம்
இப்போது பாவனையில் இல்லை
என்று அழகாய் சொல்கிறாள் யாரோ
ஒருத்தி

என் மேல் அவளுக்கு இருக்கும்
அக்கறை கூட இலக்கத்தை
மாற்றிய உனக்கில்லையடி

*

தெரிந்தோ தெரியமலோ
அதிகமாய் வெளி நாட்டு
ஆண்கள்தான் விதவைக்கு
வாழ்க்கை கொடுக்கிறர்கள்

புரியவில்லையா…
உள் நாட்டுக் காதலனை சாகடித்து
விட்டல்லவா கழுத்தை நீட்டுகிறாள்
வெளி நாட்டு மாப்பிள்ளைக்கு

*
கவிஞர்களிடம் காதல் தோல்வியா
என்று கேக்கும் பெண்களிடம் ஒரு கேள்வி
கேக்க வேண்டும் உங்கள் பெயர்களை
வைத்த தந்தையும் காதலில்
தோற்று போனவரா என்று

-யாழ்_அகத்தியன்


Follow

Get every new post delivered to your Inbox.