தொலைத்த கவிதை…

செப்டம்பர் 5, 2007

13

உன்னை நினைக்க மறந்த
இரவொன்றில் நிலவின் துணை
கொண்டு எழுதிய கவிதை இது

தயவு செய்து வாசித்துவிடாதே
உன் கண்ணீரை ஏந்தினால் என்
கவிதை இறந்துவிடும்

காலங்கள் கரைந்தாலும் கரை
சேராத நதியாய் தேங்கியபடியே
கிடக்கிறது என் காதல் உன்னால்

காதல் எனும் வானத்தில் நாமிருவரும்
பறந்து திரிந்த காலங்களை எண்ணியபடியே
சிறகுகள் இன்றி தனிமரமாய் இன்று நான்

என் காதல் உன்னை மட்டும் காதலிக்க
கற்றுத்தரவில்லை உன்னைத் தவிர யாரையும்
காதலிக்க கூடாது என்பதையும்தான் கற்றுத்தந்தது

உன் இரவுகளின் தாலாட்டு எது என்பதை
நானறியேன் ஆனால் என் ஒவ்வொரு
விடியலின் ஓசையும் என் கவிக்குழந்தையின்
அழுகுரல்தான்

உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை நீ
என்னோடு இருந்தபோது ஒவ்வொரு நாளும்
புதுப்பக்கங்களாய் இருந்தது என் வாழ்க்கை என்று

நீ மறந்திருக்கக்கூடும் நான் உன் இதயத்தை
காதலால்தான் வாங்கிக் கொண்டேன் என்பதை
அனால் நான் மறக்கவில்லை நீ வார்த்தைகள்
எனும் அடியாட்களைக் கொண்டு என்னை
அகதியாய் விரட்டி அடித்ததை

என்றோ ஓர் நாள் யாரோ ஒருவனுக்கு
சொந்தமாகப்போகும் உன் இதயத்தில்
சில மாதங்கள் வாழ்ந்ததில் சந்தோசப்படாலும்

உன் இதயத்தில் தொடர்ந்து வாழ
வாய்ப்பில்லாமல் போனதைவிட
உன் இதயத்தில் நான் இறக்காமல்
போனதில் கவலைதான் எனக்கு

உன்னால் என் தனிமைக்கு மிஞ்சியிருப்பது
என் பேனா மட்டும்தான் பாவம் அது நான்
அழுதால் உடனே அழ அரம்பிக்கிறது இருவரில்
யார் அழுதாலும் உன்னால் குறையப் போவது
எங்கள் அயுல்தானே

பாவப்பட்டவனின் கைக்கு விலைபோன
பேனா படாதபாடுபடத்தானே வேண்டும்

இன்று என்னைவிட என் பேனா அதிகமாக
அழுகிறது பாவம் நான் எனக்கிருக்கும்
உறவை அழவிட்டு விட்டு என்ன செய்யப்
போகிறேன் எனவே உனக்கு சொல்ல
வந்ததை சொல்லிவிடுகிறேன்

இறந்து போன என் காதலை
எரிக்க மனமின்றி என்னைக்
கொண்டு கொஞ்சம் கொஞ்சமாய்
எரித்து வருகிறேன்

முடிந்தால் நான் இறந்த மூன்றாம் நாள்
வா காதல் சாம்பலோடு என்னை சேர்த்து
அள்ளலாம்

-யாழ்_அகத்தியன்


Follow

Get every new post delivered to your Inbox.