முதல் கவிதை…

செப்டம்பர் 6, 2007

பேசும்தொல்லை

இதுவரை கணக்குகளை மட்டும்
விளங்கபடுத்த என் கையோடு
கூடிய பேனா

முதல் முறை உனக்கு கவி எழுத
என் கையோடு கூட்டியதில் வந்த
கழித்தல்கள் இவை

தயவு செய்து சிரித்துவிடாதே
கலைந்து கிடக்கும் என் எழுத்துக்கள்
இன்னும் கலைந்துவிடும்

பல கோடி கவிதைகளை கண்டபின்னும்
பசியாறவில்லை இன்னும் காதலுக்கு
எப்படி எழுதப்போகிறேனோ உனக்கொரு
கவி

சிலையின் கையில் கொடுக்கப்பட்ட
பேனாபோல் அசையாமல் மிதக்கிறேன்
கற்பனைக்கடலில் எப்படி எழுதப்போகிறேனோ
உனக்கொரு கவி

எண்ணில் விட்டதில்லை
எழுத்துக்களில் விடுவதுண்டு
பிழை எப்படி எழுதப்போகிறேனோ
உனக்கொரு கவி

உனக்காய் கவி எழுத விடிய விடிய
யோசித்ததில் இரவுகளின் நீளத்தை
என்னால் இப்படித்தான் அளக்க
முடிந்தது

நீ நீயாக இருந்தால்
நான் நானாக இருந்தால்
நமக்கு மிஞ்சப் போவது
எதுவுமில்லை என்று

தயவு செய்து அன்பே
என்னை மன்னித்துவிடு

உன்னை கணக்கிடச்சொல்
அரை நொடி போதும் என்
பேனாவுக்கு

உனக்காய் கவி எழுதச்சொல்
அரை ஜென்மம் போதாது

அன்பே…
காதலுக்கு கவிதை
அழகுதான் ஆனால்
கல்யாணத்துக்கு
கணக்கு மட்டும்தான்
அவசியம் எனவே

வா அன்பே வா
இன்றே ஆரம்பிப்போம்
நம் கணக்குகளை

-யாழ்_அகத்தியன்


Follow

Get every new post delivered to your Inbox.